இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியீடு..!

 
1

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ம்தேதி அறிவிக்கப்பட்டது.10-ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 55 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முன்னதாக நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும், ஒரே சின்னத்தை பலர் கேட்டால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.