பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு செய்த போதை ஆசாமி... வெளுத்து வாங்கிய போலீசார்

நாகையில் பயணிகளுக்கு இடையூறு செய்த போதை ஆசாமியை வெளுத்துவாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர், அவரை ஆட்டோவில் ஏற்ற மல்லுக்கட்டி முடியாததால் நடந்தே காவல்நிலையம் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் குடிபோதையில் ஏறிய நபர்பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் போதை ஆசாமி அக்கரைப்பேட்டை டாடாநகரை சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரை காவல் நிலையம்அழைத்தனர். அதற்கு அவர் போலீசாருக்கு ஒத்துழைக்காததால் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அந்த நபரை பேருந்தில் பயணிகள் முன்பாகவே கடுமையாக தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் போதை ஆசாமிக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பேருந்தைவிட்டு போதை இளைஞரை போலீசார் கீழே இறக்கி சாலையில் வந்த ஆட்டோவை மடக்கி காவல்நிலையம் அழைத்துசெல்ல திட்டமிட்டனர். ஆனால் 4 போலீசார் மல்லுக்கட்டியும் அவரை ஆட்டோவில் ஏற்ற முடியாமல் தவித்தபோலீசார், நடந்தே காவல் நிலையம் செல்ல முடிவெடுத்தனர். பின்னர் போதை ஆசாமியை கைத்தாங்கலாக காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், அங்கு அவரை சிறப்பாக கவனித்தனர். நாகையில் பொதுமக்கள் முன்னிலையில் போதை ஆசாமியை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கடுமையாக தாக்கிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.