வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் ( ஜன 18) நிறைவடைகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
டிச.19ம் தேதி முதல் ஜன 18ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மேலும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களும் நடைபெற்றது. இதன்படி, தற்போது வரை 12,80,668 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சுமார் 66 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 12.80 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதன்படி பார்த்தால் இன்னும் 53.65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கால அவகாசம் நீட்டிப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


