நாட்டின் அதிவேக மெட்ரோ 'நமோ பாரத்' தயார்! இனி டெல்லி டூ மீரட் 55 நிமிடம் தான்..!
விரைவு ரயில் சேவையின் முன்னோட்டமாக டெல்லியில் இருந்து மீரட் வரைக்கும் செல்லும் வகையில், புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலுக்கு நமோ பாரத் என்று பெயரிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மோடிபுரத்திற்கும், டெல்லியின் சராய் கலே கானுக்கும் இடையேயான இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 82.15 கிலோ மீட்டர் தொலைவை, இனி பயணிகள் 55 நிமிடங்களில் சென்றடைலாம்.
பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பது, நகர்புற போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பிராந்திய போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் மத்திய அரசு நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நமோ பாரத் ரயில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 12,930 கோடி ரூபாய் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லிக்கும், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டுக்கும் இடையே மொத்தம் 82.15 கிலோ மீட்டர் தூரம் நமோ பாரத் அதிவேக மெட்ரோ ரயில் பயணிக்கும். இதில் 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல்மட்ட பாலத்திலும், 12 கிலோமீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும் பயணிக்கும். டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை 'நமோ பாரத்' 55 நிமிடங்களில் சென்றடையும்.
மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில், சுமார் 22 மீட்டர் உயரத்துடன் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெருமையை சராய் கலே கான் நிலையம் பெற்றுள்ளது.
மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் பணிமனைக்கு இடையேயான 23 கிலோமீட்டர் தொலைவுக்கு மணிக்கு 120 கிலோமீட்டர் இயக்கும் விதத்தில் 'நமோ பாரத்' வடிவமைக்கப்பட்டுள்ளது.

