பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டர் அழுத்தியதால் விபரீதம்... கோயிலுக்குள் பாய்ந்த கார்!

 
பிரேக்

பூஜை போட வந்த புதிய கார் கோயிலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் தான் புதிதாக வாங்கிய மாருதி சுசுகி ஈகோ வாகனத்துடன் வந்துள்ளார். அப்போது காருக்கு பூஜை போடுவதற்காக கோயில் முன்பாக காரை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய உள்ளே சென்றுள்ளார்.


பூஜையை முடித்துவிட்டு தனது காரை எடுக்க முயன்ற சுதாகர்பிரேக்கிற்கு பதில்  தவறுதலாக  ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் திடீரென கட்டுப்பட்டை இழந்து கோயில் உள்ளே நுழைந்து மண்டபத் தூணில் இடித்து நின்றது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கோயிலுக்குள் இருந்த பணியாளர்கள் காருக்குள் இருந்த சுதாகரை பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக சுதாகருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் புதிய கார் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.