45 நிமிடமாக பஸ் வரவில்லை எனக் கூறிய நபரிடம்...“நான் சாப்பிடவில்லை தம்பி” என புலம்பிய அமைச்சர்

 
s

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த தினம் வார இறுதி நாள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைமேடையில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகளிடம் சென்ற போக்குவரத்து துறை அமைச்சருடன் போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, கும்பகோணம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை எனவும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராததால் நீண்ட நேரமாக காத்திருப்பதாக அமைச்சரிடம் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 


இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் நடைமேடையில் காத்திருந்த பயணிகளை எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்டு முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யாத பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்ததால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் ஏற்றி அனுப்பியும், கழிவறைக்கு சென்று சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வும் மேற்கொண்டார். அப்போது பயணி ஒருவர் துறையூருக்கு செல்ல பேருந்துகள் இல்லையென அமைச்சரிடம் தெரிவிக்க, "நீ நன்றாக சாப்பிட்டு இருக்கிறாய் நான் இன்னும் சாப்பிடவில்லை" என அமைச்சர் பதிலளித்தது பயணிகளிடையே முகச்சுழிவை ஏற்படுத்தியது.  தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போதும் அமைச்சரை விடாத பயணிகள் தூத்துக்குடிக்கு பேருந்துகள் இல்லை எனவும், சென்னை மாநகரப் பகுதியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வர போதிய அளவில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.