கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்த பேருந்து! கோவையில் சோகம்

 
accident

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து,  பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். திங்கட்கிழமை மற்றும் வார விடுமுறை நாட்களில் இங்கு அதிக அளவில் கூட்டம் காணப்படும். நேற்று திங்கட்கிழமை என்பதால் வெளியூர்களில் இருந்து அதிகாலை நேரத்தில் நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் வந்து பேருந்துக்காக காத்திருந்தனர். 

அப்போது அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென்று கணுவாயில் இருந்து காந்திபுரம் வழியாக சிங்காநல்லூர் செல்லும் தனியார் நகரப் பேருந்து,  பேருந்து நிலையத்துக்குள் வேகமாக நுழைந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று இருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். ஆனாலும் சில பயணிகள் மீது மோதிய பேருந்து, முன்னால் நின்று கொண்டிருந்த கிணத்துக்கடவு செல்லும் அரசு பேருந்தின் பின்பகுதியில் லேசாக மோதிவிட்டு நின்றது.  இச்சம்பவத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் பொறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவர், பயணிகள் என 9 பேர் காயமடைந்தனர்.  

பேருந்து விபத்தில் சிக்கியதும், நடத்துநர்கள் அதிலிருந்து இறங்கி ஓடிவிட்டனர்.  அதேசமயம், அந்தப் பேருந்தின் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்து காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.