மீண்டும் அதிர்ச்சி! ஓடிக்கொண்டிருந்த ஏ.சி. பேருந்தில் பயங்கர தீ விபத்து

 
Fire

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தனியார் நிறுவன ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஏ.சி. பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பணிபுரிய காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தொழிற்சாலை மற்றும் ஒப்பந்த பேருந்து மூலம் பணிக்கு சென்று  வருகின்றனர்.


இந்நிலையில் மோபிஸ் தனியார் தொழிற்சாலைக்கு திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜா என்பவர் மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சாலையில் சென்று கொண்டிருந்தது. வல்லக்கோட்டை பகுதியை கடக்கும்போது வாகனத்திலிருந்து திடீர் புகை வருவதாக அறிந்த ஓட்டுநர் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி அதிலிருந்த நபர்களை இறங்கி வர அறிவுறுத்தினர்.

இந்நிலையில் வாகனத்திலிருந்து வெளியேறிய புகை காற்றின் காரணமாக தீடிரென தீயாக மாறி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக பொதுமக்கள் அருகிலிருந்த நிசான் மற்றும் அரசு தீயணைப்பு துறை வாகனங்களுக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் வாகனம் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பணியாளர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஓரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.