இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நாளை தொடக்கம்..

இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நாளை தொடங்குகிறது. கூட்டணிக்கான இலச்சினை மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் முதல் 2 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பீஹார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்தக் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நாளை (ஆக 31) மற்றும் நாளை மறுநாள் ( செப்.1) ஆகிய தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
6 மாநில முதல்வர்கள் உள்பட 26 கட்சிகளின் தலைவர்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அத்துடன் அஸ்ஸாம் உள்ளிட்ட வழகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த புதிய கட்சிகள் , உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கட்சியும் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை மும்பையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கான புதிய சின்னம், பொது செயல் திட்டம் , தொகுதி பங்கீடு , பிரதமர் வேட்பாளர் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது. நாளை இரவு 7 மணிக்கு இந்தியா கூட்டணி சின்னம் வெளியிடப்படும் என்றும், ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.