"ஓபிஎஸ்ஸை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு"- ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு பதிலடி
அதிமுக ஆட்சிக்காலத்தில் விட்டு வைத்திருந்த கடனில் இருந்து 9.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியமைந்த பின்னர் மட்டும் சுமார் ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் எனும் பெருமையை தமிழகம் படைத்துள்ளது. 10.71 கோடி கடன் இருப்பதாக இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கடன் வாங்குவதாக இருந்தாலும், நிதி மேலாண்மையாக இருந்தாலும் அதனை ஒப்பிட்டளவில் பார்க்க கூடாது. அதிமுக ஆட்சிக்காலத்திலும் கடன் வாங்கப்பட்டது. திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் விட்டு வைத்திருந்த கடனில் இருந்து 9.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடனின் ஒட்டுமொத்த வளர்ச்சி 96 சதவிகிதம் தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் 100 சதவிகிதம் கடன் வளர்ச்சி இருந்தது என்று பதில் அளித்தார். ஓபிஎஸ்ஸை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது வேறு, ஆனால் இந்த OPS (old pension scheme) வேறு. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்ததே அதிமுக ஆட்சி காலத்தில்தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

