"ஓபிஎஸ் எங்க போனாரு.. கேரளாவுல 15 நாளா ஆயில் மசாஜா?" - தங்க தமிழ்செல்வன்

15 ஆண்டுகளாக போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்த ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
100 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ள நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஞாயிற்றுக்கிழமை போடிநாயக்கனூரில் 100 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் நிறைவு பெற்ற நிலையில் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வருகை தர உள்ளனர். திட்டத்தை தொடங்கி வைக்க போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படும். வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனி விருப்பம்.
போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயித்ததற்கு பிறகு இதுவரை அவர் எத்தனை முறை போடிநாயக்கனூருக்கு வந்துள்ளார்? தோற்றுப்போன நான் தான் அடிக்கடி போடிநாயக்கனூருக்கு வருகை தந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறேன். 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் போடிக்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டு வரவில்லை. போடி சட்டமன்ற உறுப்பினரான ஓ.பன்னீர்செல்வம் கேரளாவில் ஆயில் மசாஜ் செய்து வருவதாக தகவல் வந்துள்ளது” எனக் கூறினார்.