TET தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி..!

 
1 1

2010 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு எழுதுவதற்கு, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தாள் ஒன்றுக்கான தகுதித்தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதியும், தாள் இரண்டுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 2 அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேதியை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது.

ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா? முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.