கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ..

கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டதில் பல நூறு ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் மழை இல்லாத காரணத்தால், கொடைக்கானலில் மலைப்பகுதிகளில் பெரும்பாலான வனப்பகுதிகளில் வறட்சி நிலை வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் வனப்பகுதிகள் மற்றும் அரசு தரிசு நிலங்களில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய சிட்டி வியூவ் பகுதியில், நேற்று இரவு பற்றிய காட்டுத்தீயானது தற்போது வரை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
கிட்டத்தட்ட 100 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் தற்போது இந்த காட்டுத்தீயானது எரிந்து வருகிறது. தீயின் காரணமாக நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து நாசமாகி உள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் இருக்கக்கூடிய வனவிலங்குகளும் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. மேலும் தொடர்ந்து இதுபோன்று வறட்சி ஏற்பட்டால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டுத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.