தொகுதி மறுவரையை ஏற்க முடியாது - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

மத்திய அரசின் தொகுதி மறுவரையை ஏற்க முடியாது என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை திமுக குழு சந்தித்தது. அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து, மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக, தென்மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. எந்த காரணங்களுக்காகவும் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தென் மாநிலங்களில் பாஜகவை வளர அனுமதிக்காததால், இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது பாஜக. கட்சி தலைமையிடம் அனுமதி பெற்றபின் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்பேன் என கூறினார்.