செல்போன் கேட்டு மலை உச்சியில் இளைஞர் தற்கொலை.. பெற்றோரும் பலி..!

 
1

மராட்டிய மாநிலம் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டம், தேவ்லாய் பகுதியில் செல்போன் வாங்கித் தர மறுத்ததால் கோபமடைந்த 18 வயது இளைஞர் மலை உச்சிக்குச் சென்று குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அவரை சமாதானப்படுத்தச் சென்ற தந்தையும், தவறி விழுந்து உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயும் அதே மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்டம், தேவ்லாய் என்ற பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், தனது பெற்றோரிடம் புதியதாக செல்போன் வாங்கி தருமாறு அடம்பிடித்துள்ளார். ஆனால் அதை பெற்றோர் நிராகரிக்க, கோபமும், அதிருப்தியும் அடைந்த இளைஞர் நேராக, அருகில் உள்ள காவ்டா மலை உச்சிக்குச் சென்றார்.மகனின் கோபம் மற்றும் அடம்பிடித்தலைக் கண்ட பெற்றோர், அவரை சமாதானப்படுத்த பின்னேயே சென்றுள்ளனர்.

மலை உச்சிக்கு 3 பேரும் சென்றதைக் கண்ட அங்குள்ளோர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். மலை உச்சிக்குச் சென்ற இளைஞர் செல்போன் வாங்கித் தராவிட்டால் கீழே குதித்து இறந்து விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக, அவரது பெற்றோரும், பொதுமக்களும் சமாதானப்படுத்த முயன்றனர். இந்த பேச்சுவார்த்தையில் போலீசாரும் ஈடுபட்டனர்.எந்த சமாதானமும் பலன் அளிக்காத சூழலில், இளைஞரை மலை உச்சியில் இருந்து காப்பாற்ற எண்ணிய தந்தை அவரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு இழுக்க முனைகிறார்.

அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் இருவருமே மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து இறந்தனர்.இதைக் கண்டு தாங்கி கொள்ள முடியாத தாயும், அதே மலை உச்சியில் இருந்து கீழே குதித்தார். 3 பேரும் மலை உச்சியில் இருந்து கீழே குதித்ததை கண்ட பொதுமக்கள் பீதியில் அலறினர். பல மணி போராட்டத்திற்கு 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.