‘உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ பெரம்பலூர் அருகே பரபரப்பு!
பெரம்பலூர் அருகே உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர், இளம்பலூர் பகுதியில் ஒய்வு பெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளை, அவரது தாய்மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. கடந்த மார்ச் மாதம் அந்த பெண்ணின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணையில், குழந்தை இல்லாத சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. கணவன் இறந்த சோகத்தில், அந்த பெண் தனது அம்மா வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி பெரம்பலூர் முழுவதும் அந்த பெண் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டப்பட்டிருக்கிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்த அந்த பெண்ணின் கணவர் வீட்டார் இவ்வாறு போஸ்டர் ஒட்டினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.