அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள்- கண்ணீருடன் மாணவர்கள் பாச போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்ற நிலையில் பள்ளியிலிருந்து கிளம்பிய ஆசிரியர்களை கண்ணீருடன் மறித்து போக வேண்டாம் என தடுத்த மாணவ, மாணவிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆண்டுகளாக பணியாற்றி மாணவர்களை 100% தேர்ச்சி பெற வைத்த சமூக அறிவியல் ஆசிரியர் பால்பாண்டி, அறிவியல் ஆசிரியர் பூங்குழலி, மற்றும் 2 ஆண்டுகள் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் பொன்வடிவு ஆகியோர் மாணவர்களிடம் ஆசிரியர்களாக மட்டுமின்றி நலன் விரும்பிகளாக இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இவர்களை ரொம்பவே பிடித்திருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது நடந்து வரும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று 3 ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாறுதலில் செல்ல உத்தரவு பெற்றுள்ளனர். இன்று செவ்வாய் கிழமை காலை பணியிடமாறுதல் உத்தரவுடன் மேற்பனைக்காடு பள்ளிக்கு வந்த போது நம்ம ஆசிரியர்கள் எல்லாம் வேற ஊருக்கு போறாங்களாம் என்ற தகவல் மாணவ, மாணவிகளுக்கு தெரிந்ததும் ஆசிரியர்களை சூழ்ந்து கொண்ட மாணவ, மாணவிகள், “நீங்க போகாதீங்க சார், போகாதீங்க மிஸ்” என்று மாணவ, மாணவிகள் கலங்கி நின்ற போது ஆசிரியர்களும் கலங்கிவி்ட்டனர். இதைப் பார்த்த மற்றவர்களையும் கலங்க வைத்துவிட்டது. “வேறு பள்ளிக்கு போனாலும் நாங்க உங்களைப் பார்க்க வருவோம்” என்று தற்காலிக ஆறுதல் வார்த்தைகளை கூறி மாணவ, மாணவிகளை சமாதானம் கூறி கலங்கிய கண்களுடன் விடைபெற்று வெளியேறினர் ஆசிரியர்கள். தான் இந்தப் பள்ளியைவிட்டு போகும் போது மாணவர்களுக்கு பந்துகளை பரிசாக வழங்கி கண்கள் கலங்க விடைபெற்றார் ஆசிரியர் பால்பாண்டி.

பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் எப்போது இந்தப் பள்ளியைவிட்டு போவார்கள் என்ற எண்ணம் பல மாணவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பல ஆசிரியர்கள் அடுத்த பள்ளிக்கு செல்வதை மாணவர்களின் மனங்கள் ஏற்கவில்லை என்பது இந்த ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.


