தொழில் முனைவோருக்கு ஜாக்பாட்... சிட்கோ மனைகள் விலை 75% குறைப்பு - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் விலையை குறைத்துள்ளது. இதன்படி 50 ஆண்டுகள் கடந்து தனது சேவையினை வழங்கி வரும் சிட்கோ வரலாற்றில் முதல் முறையாக காலி மனைகளை கொண்ட தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பினை மிகக்கணிசமாக குறைத்துள்ளது.

உதாரணமாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு 1 கோடியே 19 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயிலிருந்து 75% குறைத்து 30 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கும்பகோணத்தில் 3 கோடியே 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயிலிருந்து 73% குறைத்து 81 லட்சத்து 89 ஆயிரத்து 300 ரூபாய் எனவும், நாகப்பட்டினத்தில் 2 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 65% குறைத்து 85 லட்சத்து 35 ஆயிரத்து 800 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் 9 கோடி ரூபாயிலிருந்து 4.2 கோடி ரூபாக குறைக்கப்பட்டுள்ளது.
விண்ணமங்கலத்தில் 2 கோடி ரூபாயாகவும் ஆலத்தூரில் 3.5 கோடி ரூபாயாகவும் மற்றும் ஈரோடு தொழிற்பேட்டையில் 3.8 கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதிக விலைமதிப்பினால் பல வருடங்களாக குறைவான மனைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு 400-க்கும் மேற்பட்ட காலி தொழில்மனைகளை கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30% முதல் 54% வரையிலும் மற்றும் விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 40% முதல் 50% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் 19 தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பும் சுமார் 5% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017 ஆம் ஆண்டில் இருந்த மனைமதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பத்தூர் மற்றும் திருமழிசை தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017-ஆம் ஆண்டின் ரூ. 25 கோடியே 7 லட்சத்து 79 ஆயிரத்து 100, 7 கோடியே 66 லட்சத்து 77 ஆயிரத்து 400 என்ற மனை மதிப்பே நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் துவங்க முடியும் என்பதால் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.


