வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது - தமிழக அரசு தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் நடந்துள்ளது. முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.