டாஸ்மாக் வழக்கு - விசாரணையை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை

 
supreme court

டாஸ்மாக் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அமலாக்க துறையின் சோதனையையும், பறிமுதலையும் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசு தரப்பிலும், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தது.  அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில்,  டாஸ்மாக் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முறையீடு 
செய்தார். டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.