போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது - டிஜிபி சைலேந்திர பாபு

 
DGP

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்ற நிலை வந்துள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். 

தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆய்வு செய்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதலமைச்சரின் திட்டம். அந்த வகையில் கஞ்சா வேட்டை 1, 2, 3 என்று நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். சுமார் 750 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போலீசாரின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக போதைப்பொருட்களின் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது. 

இன்னும் சொல்லப்போனால் பல பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது. போதைப்பொருள் இல்லாத பகுதி என பல போலீஸ் நிலையங்கள் அறிவித்து உள்ளன. அடுத்தகட்டமாக போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டங்கள் என அறிவிக்க உள்ளனர். போதைக்கு அடிமையான பலர் போதைப்பொருட்கள் கிடைக்காததால் அதற்கு பதிலாக மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று தகவல் வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவ துறை ஆகியவை இணைந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.