திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டது - மு.க.ஸ்டாலின் டுவீட்!

 
cm stalin

பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.   

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. இதன் காரணமாக அந்த கட்சி அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆளுங்கட்சியான பாஜக 63 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறாது. இதேபோல்  மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.  பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.