ஒன்றுமே தெரியாமல் பேசாதீங்க மிஸ்டர் விஜய்... தமிழிசை காட்டம்

ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம் என கேஸ் சிலிண்டர் விலையுயர்வு தொடர்பான தவெக தலைவர் விஜயின் அறிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர். தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு கண்டன தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “கேஸ் விலை ஏற்றத்துக்கு விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விஞ்ஞானப்பூர்வமாக ஏதாவது இருக்கிறதா? Demonetization மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே... அப்படி திரைத்துறையில் Black டிக்கெட் ஒழிக்கப்பட்டதா? விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ, இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்களா? ஒன்று தெரியாமல் விஜய் போன்றோர் பேச வேண்டாம். விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும் ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது. விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், நடனமாடவும் தான் தெரியும், ஏமாற்றவும் தெரியும். அரசியல் தெரியாது” என்றார்.