தமிழிசை கொடுத்த வார்னிங்..! இனி ஐடி விங்கில் உள்ளவர்கள் தவறாக எழுதினால் அவ்வளவு தான்..!

 
1

தெலுங்கனா மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலுக்கு முன்பாக அப்பொறுப்பில் இருந்து விலகினார். லோக்சபா தேர்தலில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் 2,25,945-வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகும் அரசியல் களத்தின் அனல் தணிந்தபாடில்லை. தேர்தலில் பெற்ற வெற்றி, தோல்வி தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் காரசாரமாக வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தாராஜன், பாஜக ஐடிவிங்கில் உள்ளவர்கள் கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிப்பதாக ஆவேசமாக பேசியுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவள். இன்னொன்று எதிர்க்கட்சி இணையதளவாசிகளை எதிர்ப்பது போலவே உட்கட்சி இணையதளவாசிகளையும் நான் விமர்சிக்கிறேன். கட்சியின் தலைவர்களை தவறாக எழுதினீர்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் எச்சரிக்கிறேன்.

தலைவர்களின் கருத்தை கருத்தாக மட்டுமே பதிவு செய்யுங்கள்.. நான் கடுமையாக உழைப்பதற்காக நான் வந்து இருக்கிறேன். நான் கவர்னராகவே இருந்து இருக்கலாம்.. ரோட்டில் உட்கார்ந்து இருக்கிறீர்களே என்கிறார்கள். நானே கவலைப்படவில்லை.. உங்களுக்கு என்ன கவலை. நான் கவர்னராக இருக்க வேண்டுமா? தலைவராக இருக்க வேண்டுமா என்பதை நான் முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு பண்ணிட்டேன். தமிழ்நாடு களத்தில் தான் நிற்பேன். இணையதள வாசிகளை அடக்கி வையுங்கள். இஷ்டத்திற்கு எழுதுறாங்க.. பரட்டை என்றாலும்.. இது ஒரிஜினல்.. என் முகத்தை இன்று விகாரமாக போட்டு இருக்கிறார்கள். நான் ஒன்றும் அழகி என சொல்லிக்கொள்ளவில்லையே.. தோல்வி என்பது சகஜம் தான்.

40 எம்பி வச்சிருக்கீங்க என்ன செய்வீங்க.. வெளிநடப்பு செய்வீர்கள்.. நாங்களாக இருந்தால் வழி நடத்தி இருப்போம். நீங்கள் வெளிநடப்பு செய்வீர்கள். அவ்வளவுதானே.. காதறுந்த ஊசி மாதிரி எதற்கும் பயன்படாது. ஸ்டாலின் தப்பு செய்துவிட்டார். மத்தியில் உள்ள ஆட்சியோடு இணக்கமாக இருந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கும். தமிழ் மக்களுக்கு ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார். இவ்வாறு தமிழிசை பேசினார்.