தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனை படைக்க வாழ்த்துகிறேன் - தமிழிசை

 
tamilisai tamilisai

அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மார்ச் - 8 மகளிர் தினமாக  இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது...
இன்று பெண்கள் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு முழுமையான தடையில்லாத அடிப்படைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, வரதட்சணை இல்லாத திருமணங்கள், கலைக்கப்படாத பெண் சிசுக்கள்,பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள்,சமுதாய களம் மட்டுமல்ல,மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும்.

இவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும்.நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமை தலைமையிலான மத்திய அரசு மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது.பிறந்த பெண் என் பெருமை என்று செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஏற்படுத்தியதிலிருந்து பெண்கள் பொருளாதாரத்திலும், தொழிலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என முத்ரா வங்கி திட்டம் கொண்டு வந்ததிலிருந்து பல பெண்களுக்கு அமைச்சரவையில் சவாலான துறைகளை அளித்ததிலிருந்து மகளிரின் நம்பிக்கை நட்சத்திரமாக நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் திகழ்கிறார்கள். இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.