“பட்டினப்பாக்கம் அரசுக்கான கட்டுமான இடம் அல்ல”- தமிழச்சி தங்கபாண்டியன்

 
 “திராணி இருந்தால்... நேர்மையா பதில் சொல்லுங்க அமித்ஷா” - தமிழச்சி தங்கபாண்டியன்..!

பட்டினப்பாக்கம் பகுதியில், புதிய  தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில், “மயிலை  -  பட்டினப்பாக்கம் பகுதியில், புதிய  தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்! அகலம் குறைந்த சாந்தோம் நெடுஞ்சாலை -  8-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பல்லாயிரக்கணக்கான  குடியிருப்புகள் -  மீனவ மக்களின் வாழ்வாதாரம் என மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பலமாடிகளோடு தலைமைச் செயலகம் அமைப்பது மக்கள் நலனுக்கு எதிரான மோசமான திட்டமிடல்!

ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் திணறும் இப்பகுதியில் அமைச்சர்கள், அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என கூடுதல் நடமாட்டம் வந்தால், அதன் பாதிப்பை மாணவர்களும் பொதுமக்களும் மீனவ மக்களும் ஏன் சுமக்க வேண்டும்? கடற்கரைப் பகுதி மீனவர்களுக்கு வாழ்வாதாரம்; அரசுக்கான  கட்டுமான இடம் அல்ல. மக்களின் குடியிருப்பு, வாழ்வாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் மாற்று இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும். மயிலை மக்களின் பிரதிநிதியாக, இந்த மக்கள் விரோதத் திட்டத்தைக் கைவிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.