இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகத் திகழ்கிறது தமிழ்நாடு

 
tn

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அருந்தவப் புதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்லபல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியத் திருநாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிடும் நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் அவர்கள் ஆற்றலை திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும்பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, "நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே" எனும் சங்ககால பாடலை நினைவுகூரும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையை 28.3.2000 அன்று ஏற்படுத்தினார்கள்.

ntt
அந்த வகையில், இத்துறையின் பெயருக்கேற்ப, மிகவும் குறைந்த வயதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகள், தொய்வில்லாத் தொடர் பணிகள் காரணமாக, விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார் என்றால் அது மிகையில்லை.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இத்துறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்கள். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப் பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

gg
அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட வேண்டுமென்கின்ற தொலை நோக்குடன் திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் வெளியிட்டார்கள்.
பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.


சென்னையில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம்
கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்சித் தரத்தை உயர்த்திடும் வகையில், குறிப்பாக தடகளம், நீச்சல், டென்னிஸ், ஹாக்கி, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதை இலக்காகக் கொண்டு 81 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 87.61 கோடி ரூபாய் வென்று  பெருமை

hhh
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை தமிழ்நாட்டிற்குப் சேர்த்துள்ள 2,738 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுவரையில் எந்த அரசும் வழங்கிடாத வகையில் உயரிய ஊக்கத் தொகையாக 87 கோடியே 61 இலட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.


சென்னையில் உலகளாவிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022
தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய திட்டமிடல் காரணமாகவும், இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டியினை வரலாற்று புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் விளையாட்டு நாடுகள் எல்லாம் வியக்கும் வண்ணம் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழ்நாட்டரசின் விருந்தோம்பலைக் கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது.
இதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்க் கொடி நாட்டியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு " Man of the Year" என்கின்ற விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டென்னிஸ் சங்கத்திற்கு வழங்கப்பட்ட 5 கோடி ரூபாய் நிதியுதவியுடன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.
ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி
2022, 2023 மற்றும் 2024 ஆகிய 3 ஆண்டுகளில் தலா 1 கோடி ரூபாய்ச் செலவில், ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளாலும் இப்போட்டியினைச் சென்னையில் நடத்துவதற்குத் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்திற்கு வழங்கிய ரூபாய் 2 கோடி நிதியுதவியினாலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்குவாஷ் உலகக்
கோப்பை 2023 சென்னையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்-2023
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சதுரங்க அறக்கட்டளையும் இணைந்து தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய 2 கோடி ரூபாய்ச் செலவில் 8 நாடுகள் பங்கேற்ற சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2023 போட்டியானது சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

குடியரசு தின முகாம் 
2023 ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தைப் பெற்றது. மேலும் இந்நிகழ்வில் 6 பிரிவுகளில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குநரகம் "சிறந்த என்.சி.சி இயக்குநரகம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது.