உதகை ரேஸ்கோர்சை கையகப்படுத்திய தமிழ்நாடு அரசு..!

 
1

உதகையில் வருவாய்துறைக்கு சொந்தமான 52.34 ஏக்கர் நிலத்தை 1977- ஆம் ஆண்டு முதலாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்தது. அந்த நிலத்தில் குதிரை பந்தயம் மைதானத்தை அமைத்து, குதிரை பந்தயத்தை நடத்தி வந்தது. ஆரம்பத்தில், சரிவர குத்தகை செலுத்தி வந்த ரேஸ் கிளப் நிர்வாகம், பிறகு குத்தகை தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி 2001 ஆம் ஆண்டு முதல் குத்தகை தொகையை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு கடந்த 23 வருடங்களில் ரேஸ் கிளப் நிர்வாகம் ரூ. 820 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்துள்ளது. இதையடுத்து, உதகை மாவட்ட நிர்வாகம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குதிரை பந்தயம் மைதானத்தை மீட்குமாறு கடந்த 2019-இல் உத்தரவிட்டது. எனினும், ரேஸ் கிளப் நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ரேஸ் கிளப் சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 21.6.2024 அன்று மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அந்த நோட்டீஸுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகமானது பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து ரேஸ்கோர்ஸை சுற்றி ஆங்காங்கே இந்நிலம் அரசுக்கு கையகப்படுத்தப்பட்டது என்ற பேனர்களை நிறுவினர். மேலும் குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலக கட்டிடங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. மேலும் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.