தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

 
budget

தமிழக சட்டப்பேரவையில், 2023-24-ம் ஆண்டுக்கான  பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 09-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் நடைபெற்ற நிலையில், அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மின்னணு வடிவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் ம அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பட்ஜெட் மீதான விவாதத்துக்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.