பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு- தமிழக அரசு

 
ச்ச் ச்ச்

சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள சதுப்பு நில பகுதிகளை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும்,  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இதுகுறித்த அறிக்கை, உறுதி செய்வதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி நான்காவது வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.