ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் - ஸ்டாலின் உறுதி...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அப்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அதில், ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த் ஆட்சியிலேயே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்ட திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் 03.8.2021 அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை தடை செய்யக்கோரியும், தீர்ப்பின் மீது சட்ட ஆலோசனைக் கேட்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்குறது. எனவே தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.