கரூர் வழக்கில் திடீர் திருப்பம் : உச்சநீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்ய வாய்ப்பு? வழக்கறிஞர் வில்சன் எம்.பி.!
திமுக எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருவர் பெயரில் போலியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் சார்பாக சிலர் வாதாடியதாக நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு பிறகு தெரிவித்துள்ளனர். இதனால், சம்பந்தப்பட்டவர்கள் மனு அளிக்குமாறும், அதனை விசாரிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்களோடு சேர்த்து எங்களையும் மனு அளிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் போது, அந்த இருவர் பெயரில் அளிக்கப்பட்ட மனு மோசடியானது என உறுதி செய்யப்பட்டால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து விடும். எனவே, உச்ச நீதிமன்றம் தற்போது அளித்தது இடைக்கால தீர்ப்பாகும். தமிழக அரசு அமைத்துள்ள அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையத்தை தொடவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஒரு நபர் விசாரணை ஆணையம் ஆனது தொடரும். தற்போது வரை சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் மாற்றுமாறு கூறியுள்ளது. எனவே, தமக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டது என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றம் மட்டுமின்றி எந்த நீதிமன்றத்திலும் போலியாக வழக்கு தொடுத்தாலும், அது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகவும், அந்த நபர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பானது கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. ஆதவ் அர்ஜுனா தங்களுக்கு .சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை வெற்றி என்று கூறியுள்ளார். மேலும் தேவை யின்றி மற்றவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீது அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவம் நடந்தது முதல் தற்போது வரை கரூர் செல்லாமல் உள்ளார். சிபிஐ விசாரணை கேட்காத நபர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை ஏன் கொண்டாடுகின்றனர். கரூரில் தவெகவினர் கேட்ட இடத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்சியினர் எழுதி கொடுத்த இடம் தான் தேர்வாகி உள்ளது. அந்த இடத்தில் எதற்காக அடிப்படை வசதிகள் அமைக்கவில்லை. எனவே அவர்கள் ஆணையத்தை சந்திக்க வேண்டி இருக்கும். நீதிமன்றத்தில் அவர்கள் வைத்த வாதம் வேறாகும்.


