பாமக - பாஜக கூட்டணியில் திடீர் விரிசல்..! இனி மத்திய அமைச்சர் பதவி தந்தால் மட்டுமே கூட்டணி..?
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில், 18 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., நான்கு இடங்களில் வென்றது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், முதல்வரான பின், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள அன்புமணி வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தார்.
செயல்பட முடியாத நிலை கடந்த 2016 சட்டசபை தேர்தலில், அன்புமணிக்கு தேர்தல் வியூக ஆலோசகராக செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி தான், விஜயின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி வாயிலாக, முதல்வர் விஜய்க்கும், அன்புமணிக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. ஆனாலும், த.வெ.க., அரசில் பா.ம.க., சேரவில்லை.
அரசியல்ரீதியாக வி.சி.க.,வுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்த முதல்வர் விஜய், அக்கட்சிக்கு அமைச்சர் பதவியும் கொடுத்துள்ளார். இதனால், த.வெ.க.,வுடன் அரசியல்ரீதியாக இணைந்து செயல்பட முடியாத நிலையில், பா.ம.க., உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால், அக்கட்சி தலைமையிலான கூட்டணி கேள்விக்குறியாகி உள்ளது. 27 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றதால், அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல், பா.ஜ.,வும் குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, பா.ம.க., முக்கிய நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, 'மத்திய அமைச்சர் பதவி தந்தால், பா.ஜ., கூட்டணியில் தொடரலாம்; இல்லையெனில் தனித்து செயல்படலாம்' என, அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.தனித்து செயல்படலாம்.
இதுகுறித்து பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கடந்த 2016 சட்டசபை தேர்தல் தவிர, 2014 முதல் பா.ஜ.,வுடன் இணைந்து தான், பா.ம.க., தேர்தலை சந்தித்து வருகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அழைத்தும், பா.ஜ.,வுடன் அன்புமணி கூட்டணி வைத்தார். இப்படி பா.ஜ.,வுடன், 12 ஆண்டுகள் பயணித்த போதும் பா.ம.க.,வுக்கு எந்த பலனும் இல்லை.
கடந்த 2014ல், அன்புமணி லோக்சபா எம்.பி.,யாக இருந்தும், மத்திய அமைச்சர் பதவி தரவில்லை.
ஒரே ஒரு எம்.பி., மட்டுமே வைத்துள்ள உத்தர பிரதேசத்தின் அப்னா தளம், பீஹாரின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா போன்ற கட்சிகளுக்கு, மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ., கொடுத்துள்ளது.
அதேபோல, தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள அன்புமணிக்கு, மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், பா.ஜ., கூட்டணியில் தொடரலாம்.இல்லையெனில் வெளியேறி, வரும் 2029 லோக்சபா தேர்தல் வரை தனித்து செயல்படலாம் என, அன்புமணி முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

