குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் சுதர்சன் ரெட்டி..
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், உடனே வாக்குகள் எண்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஆக.20) அவர் வேட்புமணு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் என்.டி.ஏ கூட்டணி எம்.பிக்கள் முன்னிலையில் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளாரிடம் அளித்தார்.
இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்கட்சி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார். சுதர்சன் ரெட்டி ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கௌகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (ஆக.21) முடிவடையவுள்ள நிலையில், இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திமுக எம்பி திருச்சி சிவா உள்பட இந்தியா கூட்டணி எம்.பிக்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


