பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள் இத்தனை மணிக்கு வரவேண்டும் - தேர்வுத்துறை அறிவிப்பு..
நாளை பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், மாணவர்கள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தால் மட்டும் போதும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 3,119 மையங்களில் நடைபெற உள்ளது. நாளை தொடங்கவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகிறார்கள். இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் அடங்குவர்.
தேர்வுக்கான வழுகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்லவும், ஷூ, பெல்ட் போன்றவை அணிந்து வரவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது, மாணவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தால், அடுத்த ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் வழக்கமாக தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். தற்போது அதனை அரசு தேர்வுத்துறை மாற்றியுள்ளது. மாணவர்கள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தால் மட்டுமே போதும் என்று தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் எனவும், காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்கவும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணிவரை தேர்வு நடைபெறும் எனவும் கூறியுள்ளது.