10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள்- மாரியம்மன் கோவிலில் மீட்பு

பவானியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான ஐந்து மாணவிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளான பவானி பகுதியைச் சேர்ந்த பவதாரணி (15), ஜெயலட்சுமி(15), சௌடேஸ்வரி(15), ஜீவிதா(15) மற்றும் கோபிகா(15) ஆகிய ஐந்து மாணவிகளும் இன்று பள்ளிக்கு வருகை தந்து தங்களது இறுதி பொதுத் தேர்வான சமூக அறிவியல் தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்லாமல் மாயமாகியுள்ளனர். மாணவிகள் மாயமானதை அடுத்து அவர்களின் பெற்றோர்கள் உறவினர் வீடுகள் மற்றும் அவர்களின் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து எங்கும் கிடைக்காததன் காரணமாக பவானி போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன ஐந்து மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்டமாக அவர்கள் கையில் வைத்திருந்த செல்போன் எண்னை ட்ரேஸ் செய்த போது திருச்சியில் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஒரே சமயத்தில் ஐந்து மாணவிகள் காணாமல் போனதன் காரணமாக அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பவானி காவல் நிலையத்தில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் மாயமான மாணவிகள் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மீட்கப்பட்டனர்.