தேர்வுக்கு பயந்து ஓடி ஒளிந்த மாணவர்கள்- குண்டுகட்டாக தூக்கி சென்ற தலைமை ஆசிரியர்

 
ச்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு மட்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள் முழு ஆண்டு தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓடி ஒளிந்த மாணவர்களை தேடிப்பிடித்து அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும்  பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறத்தில் புனித அற்புதமாதா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆலங்குடி கலிபுல்லா நகர் ஏடி காலணியைச் சேர்ந்த முகமது யாசின் சபுருநிஷா தம்பதியரின் மகன்களான அர்ஜத் 8ம் வகுப்பு முகமது யூனுஸ் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வின் தமிழ் தாள் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு அர்ஜத், முகமது யூனுஸ் ஆகிய சகோதரர்கள் இருவரும் வராதது தெரியவந்ததைத் தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசைராஜ் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதில் அப்பள்ளிக்கு வராத சகோதரர்களின் வீடு தெரிந்த ஒரு மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள அந்த சகோதரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த தலைமை ஆசிரியரை பார்த்த அந்த சகோதரர்கள் வீட்டிலிருந்து அருகே உள்ள தைல மரக்காடு மற்றும் முந்திரி காடு பகுதிக்கு சென்று ஓடி ஒளிந்துள்ளனர். 

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு திரும்பி நிலையில் பின்னர் காலை 10 மணிக்கு பிறகு மீண்டும் அப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசைராஜ் அந்த சகோதரர்கள் வீட்டிற்கு சென்று அவர்களது தாயாரிடம் பள்ளி மாணவர்கள் பற்றி விசாரணை செய்த போது அவர் தனது மகன்களை காணவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் அந்த தலைமையாசிரியர் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்த போது அவர்கள் அருகில் உள்ள கயிறு தொழிற்சாலையில் ஒளிந்திருப்பதை தெரிவித்துள்ளனர். பின்னர் தலைமையாசிரியர் அந்த கயிறு தொழிற்சாலைக்கு சென்று மாணவர்களை பிடிக்க முயன்ற போது அந்த மாணவர்கள் தைலமரக்காட்டு பகுதிக்கு ஓடியதால் மாணவர்களை விரட்டி பிடித்த தலைமையாசிரியர் அந்த மாணவர்கள் இருவரையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று மாணவர்களின் தாயாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் முழு ஆண்டு தேர்வு நடைபெறுவதால் இந்த இரண்டு மாணவர்களும் பள்ளிக்கு தேர்வு எழுத வராததால் அவர்களை தேடி வந்ததாகவும் முழு ஆண்டு தேர்வு எழுதாமல் இருக்கக் கூடாது கட்டாயம் அந்த தேர்வை மாணவர்களை எழுத சொல்ல வேண்டும் என்றும் தேர்வு எழுத மாணவர்கள் வராததால் தினந்தோறும் அவர்களை தேடி பிடித்து அழைத்து சென்று தேர்வு எழுத வைக்க வேண்டிய நிலை இருப்பதாக எடுத்துக் கூறியதை தொடர்ந்து அந்த மாணவர்களின் தாயார் உடனடியாக தனது மகன்களை பள்ளி சீருடை அணிய வைத்து பள்ளிக்கு கிளப்பி தலைமை ஆசிரியரிடம் இருவரையும் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு மாணவர்களையும் ஏற்றிக்கொண்டு தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார்.