உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2021-22ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல் உயர்கல்வி தெடர்ந்துள்ளனாரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்து, அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுல்கள் வழங்கவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகு மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென 26.08.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண், கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது.எனவே, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.