சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவியை கடித்த தெரு நாய்- பதற வைக்கும் சிசிடிவி காட்சி

 
நாய்

பழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை, தெரு நாய்கள் சூழ்ந்து கடித்ததில்  மாணவி காயமடைந்தார். மாணவியை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் ஹேமா, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். ஹேமா காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடந்து வந்தபோது அங்கு திரிந்து கொண்டிருந்த தெரு நாய்கள் சூழ்ந்து ஹேமாவை கடித்து குதறியது. மாணவி கூச்சலிட்டதை பார்த்த எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மாணவியை நாய்களிடம் இருந்து மீட்டனர். நாய்கள் கடித்ததில் கை மற்றும் காலில் ஹேமாவிற்கு காயம்பட்டது. உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை சேர்த்துள்ளனர். 


கல்லூரிக்கு சென்ற மாணவியை தெருநாய்கள் சூழ்ந்து கடித்த  சம்பவம் அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தற்போது சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து பழனியில் தெருநாய்களை பொதுதுமக்கள் கடிக்கும் சம்பவம் நடைபெறுகிறது. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.