தமிழக மீனவர்கள் 22 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

 
fishermen

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வது உண்டு. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வபோது தமிழக மீன்வர்களை தாக்கி அவர்களது வலைகள் மற்றும் மீன்களை பறித்துச் செல்வதும் உண்டு. இதனால் தமிழக மீனவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே 3 விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.