வனஸ்பதி கலந்திருப்பதாக வெளியான தகவல் தவறானது:ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் அதிரடி விளக்கம்..!
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் கூறியதாவது:
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் 1979ல் துவக்கப்பட்டது. 45 ஆண்டுக்கு மேலான பாரம்பரியத்துடன் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்கிறோம். கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி உட்பட வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என, 68 கிளைகள் உள்ளன. 50 ஆயிரம் சதுரடியில் உலகத்தரம் வாய்ந்த கிச்சன் செயல்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு இனிப்புகள் தயாராகின்றன.
சுத்தமான நெய்யினால் தயாரிக்கும் இனிப்புகளே, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை இத்தொழிலுக்கு நாங்கள் வைத்திருக்கும் சத்தியம், தர்மம் என்பது என்றுமே தொழிலில் உண்மையை சொல்வது.
பாதாம் அல்வா என்றால் பாதாம் பயன்படுத்தி தயாரிப்பது, சுத்தமான நெய் என்றால் சுத்தமான நெய் பயன்படுத்துவது. எந்த இடத்திலும், எவ்விதமான சூழலிலும் கலப்படத்துக்கு இடமில்லை.
வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஸ்வீட்ஸின் தரம் மட்டுமின்றி, நாங்கள் பின்பற்றும் சத்தியம். எந்த இடத்திலும் தவறியதில்லை. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே சொத்து. அதன் மூலமே வளர்ந்திருக்கிறோம்; உலகம் முழுவதும் பேசப்படுகிறோம். எக்காரணம் கொண்டும், நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட மாட்டோம்.
தொழில் தர்மத்துக்கு விரோதமாக எப்போதும் எங்கள் தலைமுறையே எந்த செயலும் செய்யாது.
எப்.எஸ்.எஸ்.ஐ., என்கிற உணவு பாதுகாப்பு நிறுவனத்தின் சட்டத்தின் கீழ் அனைத்து உணவு நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து உணவு நிலையங்களிலும் வழக்கமான உணவு பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த தயாரிப்பிலும் கலப்படம் இருப்பதாக எந்த ஆய்வக அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை. ஆய்வு செய்யும்போது, மூலப்பொருட்களின் தரத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவர். இது வேறு, விற்கும் பொருளை ஆய்வு செய்வது வேறு.தரம் குறைவது கலப்படம் கிடையாது. வனஸ்பதி கலந்திருப்பதாக தகவல் எவ்வாறு வெளியானதென தெரியவில்லை;
யூகத்தின் அடிப்படையில் வெளியாகியிருக்கலாம். எப்.எஸ்.எஸ்.ஐ., அறிக்கையில் கிடையாது. எவ்வித அபராதமும் விதிக்கவில்லை. தொழில் தர்மத்துடன் செயல்படுவதால், தலை நிமிர்ந்து செயல்படுகிறோம். தரத்தில் இருந்து ஒரு இஞ்ச் கூட விலகியதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


