10ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

வரும் 10ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக சிறுநீரக தினம் மார்ச் 9ம் தேதி அனுசரிக்கப்படுகிறது, இதனையொட்டி சென்னை பெசன்ட் நகரில் தனியார் மருத்துவமன சார்பில் சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த மாரத்தானில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ சிறுநீரக பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில், 200 முகாம்கள் சென்னையில் நடக்கும். ” என்று தெரிவித்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் கருணாநிதி சிறப்பு பிரிவை ஏற்படுத்தினார். அது முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒன்றிய அரசு ஒருங்கிணைப்பை கொண்டு வந்தாலும் அதிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படும்” என்று தெரிவித்தார்.