இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார இறுதி விடுமுறையையொட்டி, இன்று (21-ம் தேதி), நாளை (22-ம் தேதி) சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பஸ்களுடன் கூடுதல் சிறப்புப் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) 340 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை (நவ.22) 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று, நாளை தலா 55 பேருந்துகள் என மொத்தம் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தலா 20 பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

