பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் தொடர் விடுமுறையாகும். இந்த நாட்களில் வெளியூர்களில் வசிப்பவர்கள், குடும்பத்துடன் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வர். அப்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக நாளை (ஜன 11) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி நாளை முதல் ஜன்வரி 13 வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. இதற்கான முன்பதிவும் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நாளை முதல் சென்னையில் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, கேகே நகரில், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகள் மற்றும் 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.. இதேபோல் பொங்கல் முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி , மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் (MEPZ) இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதேபோல், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.