சிக்கலில் எஸ்பி வேலுமணி- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 
velumani

எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்கள் சட்டவிரோதம் எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.


முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது கோவை மாவட்டத்தில் மேற்கொண்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்களை சட்டவிரோதம் எனக் கூறி அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு 54 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை ஒரே நாளில் விளம்பரப்படுத்தி அந்த நாளிலேயே நேர்காணல் வைத்து ஆட்கள் சேர்க்கப்பட்டதாகவும் இதில் கடுமையான விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பணி நியமனங்களை கடந்த ஜூனில் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு அளித்த உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம், 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும், விதிமுறைகள் மீறல் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும் கூறி அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக ஒரு புறம் புகார்கள் இருக்கும் நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு இதன் மூலமாக புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.