Dude படத்திலும் அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியுள்ளர்கள்- நீதிமன்றத்தில் இளையராஜா தகவல்

 
z z

இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சீலிட்ட கவரில் சோனி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் இளையராஜா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பி ஒப்படைத்தார் நீதிபதி.

சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் இந்திய பிரைவேட் லிமிடட் நிறுவனம், எக்கோ ரெகார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விபரங்களை சோனி நிறுவனம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, வழக்கில் சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை என்றும், தற்போது வெளியாகியுள்ள Dude என்ற திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்கள் பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், சோனி நிறுவனம் ஈட்டிய வருவாயை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும்,  உச்சநீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் இளையராஜாவின் 500கும் மேற்பட்ட இசை அமைப்புகளின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு இளையராஜா பதிலளிக்க உச்சநீதிமன்றம் உதரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது சீலிட்ட கவர்களில் விவரங்களை பெறக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாக இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ் பிரபாகரன் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி என்.செந்தில் குமார், Dude திரைபடம் தொடர்பாக தனியாக வழக்கு தொடர மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி , இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் சீலிட்ட கவரில் பெறப்பட்ட விவரங்களை திரும்ப ஒப்படைத்தார்.