பாரதி மறைந்த நாளில் சாலமன் பாப்பையா மறைவு.. வைரமுத்து இரங்கல்..!!

 
11

மதுரையைச் சேர்ந்தவர் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவருக்கு வயது,90. இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமாக இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக, வயது முதிர்வு காரணமாக உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று (செப் 11) அவர் மதுரையில் காலமானார்;

இவர் தமிழ்ப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். திருக்குறளுக்கு எளிய முறையில் உரை எழுதி வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'முதல்வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வருகிறார். உலகளவில் ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்துள்ளார். தமிழ் இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவு செய்து அறிந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். "பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்; செப்டம்பர் 11 தமிழுக்கு நல்ல நாள் இல்லை போலும். கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டு சேர்த்தவர். சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த மேடைக் கலைவாணரான அவரது நாற்காலியை யாராலும் நிரப்ப முடியாது" எனக் குறிப்பிட்டுள்ள வைரமுத்து, அவரது குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது

பாரதி மறைந்தநாளில்
பாப்பையாவும்
மறைந்திருக்கிறார்

செப்டம்பர் 11
தமிழுக்கு நல்லநாள்
இல்லை போலும்

பட்டிமன்றத் தமிழ்
முடிந்துவிட்டதா?
பாமரத் தமிழ்
மூச்சை நிறுத்திக்கொண்டதா?

கல்லூரிகளில்
பயிற்றுவித்த தமிழைக் 
கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர்
சாலமன் பாப்பையா

இந்தக் குளத்தில்
கல்லெறிந்தவர்கள் நூலில்
அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்

சிரிக்க வைத்துச் 
சிந்திக்கவும் வைத்த
மேடைக் கலைவாணர்
மறைந்துவிட்டார்

அவரது நாற்காலி
காலியாகவே இருக்கும்;
நிரப்ப முடியாது

மதுரைக்கே
ஒரு வெறுமை வந்துவிட்டது;
மனம் கலங்குகிறது

அவரை இழந்து வாடும்
குடும்பத்தார்க்கும்
உலகத் தமிழர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்