சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!!
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில், சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கோயில் தற்காலிக ஊழியராக அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (29) என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) என்று தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது சிவகாமியின் மகள், கேட்டுக்கொண்டதன் பேரில், அஜித் அவர்களது காரை பார்க் செய்துவிட்டு சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் , சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து சவரன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது இளைஞர் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையின் போது அஜித் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இளைஞர் அஜித்தில் லாக்கப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனிடையே திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்படி தொடர்ந்து காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை எஸ்.பி., ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தேஷுக்கு சிவகங்கை எஸ்.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


