ஆளுங்கட்சியினர் வசம் சென்ற SIR படிவங்கள்! ஜெயக்குமார் பரபரப்பு புகார்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீதரை சந்தித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் , மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் எந்தவகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது; அதிமுகவும் அதற்கு விடாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. விதிகளின்படி வாக்காளர்களுக்கான படிவத்தை வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கவும் , திரும்ப பெறவும் வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு வாக்களார் பட்டியல் இருக்க வேண்டும். ஆனால் பல மாவட்டங்களில் ஆளுங் கட்சியினர் பிஎல்ஓக்களை மிரட்டி, அவர்களே வாக்களார்களிடம் படிவங்களை வழங்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம்..? சாமானிய மக்களிடம் ஆளும் கட்சியினர் படிவங்களை முறையாக கொடுக்கமாட்டார். ஆளுங்கட்சியினரே படிவங்களை வாங்கினால் பிற கட்சிக்கு வாக்களிப்போகின்றவர்களின் படிவங்களை வாங்கி அவற்றை தேர்தலின்போது கிழித்து எறிந்து விட கூடும். எனவே படிவங்களை திரும்ப பெறும்போது பிஎல்ஓ -2 எனும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்களை படிவங்கள் வாங்க அனுமதிக்க கூடாது.
பிஎல்ஓக்கள் மட்டுமே படிவங்களை கொடுக்கவோ, திரும்ப பெறவோ வேண்டும் என கூடுதல் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அரசியல் கட்சியினர் பிஎல்ஓக்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அவர்களே படிவங்களை கொடுக்க கூடாது. கள்ளக்குறிச்சி, கரூர் மாவட்டங்களில் ஆளும் கட்சியினர், நேற்று படிவங்களை விநியோகித்துள்ளனர். படிவங்களில் QR கோடு உள்ளது. அவற்றை முறையாக கொடுத்து, திரும்ப ஒப்படைக்க வேண்டும். போதிய கால அவகாசம் இல்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டு ஆடத் தெரியாதவனுக்கு தெருக்கோணல் என்பது போல் உள்ளது. திமுகவின் வாதம் அர்த்தமற்றது. 1200 வாக்குகள்தான் ஒரு வாக்குச்சாவடிக்கு உள்ளன. வீடுகளை கணக்கு பார்த்தால் 300-400 வீடுகள்தான் இருக்கும். தேர்தல் நேரத்தில் பூத் சிலிப்பையே 4, 5 நாளில் கொடுத்துவிடுகிறோம். அப்படி இருக்கும்போது சிறப்பு தீவிர திருத்தத்திற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது போதுமானது இல்லையா..? தீவிர சிறப்பு திருத்தம் மூலம் வாக்காளர்ளை பட்டியலில் இருந்து நீக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே விண்ணப்பம் வழங்குகின்றனர். சிறப்பு திருத்தத்தில் தவறு நடக்க அதிமுக அனுமதிக்காது. திமுகவினர் தேர்தலில் கள்ளஓட்டை நம்பியே இருக்கிறார்கள், கள்ளஓட்டை நம்பியே வாழ்கிறவர்கள், அதனால் மக்கள் கவனமாக இருக்கவேண்டும்.” எனக் கூறினார்.


