சிங்கப்பூர் - மதுரை விமான சேவை : முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

 
tn


சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்  கே.சண்முகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக 23.5.2023 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

stalin

அதன்படி நேற்று (24.5.2023) சிங்கப்பூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், மாண்புமிகு சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களையும் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று (25.5.2023)  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. கே. சண்முகம் அவர்களை சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின்போது,  அமைச்சர்  சண்முகம் அவர்கள், கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை (Methodology for Assessing Procurement Systems) முன்முயற்சியின் மூலம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல், மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் உரையாடினார்.

tnt

சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. கே. சண்முகம் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பேசும்போது சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் , இது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.